கெயில் (GAIL) நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு


  கெயில் (GAIL) நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நடக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியும் சென்னிமலை அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தில் விவசாயிகள், மற்றும் அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
  இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர் உண்ணாவிரதப் பந்தலை அப்புறப்படுத்தினர். இதன் பின்னர் சென்னிமலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் தேசிய நெடுஞ்சாலை வழியாகக் குழாயைக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  இது தொடர்பாக வரும் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டமொன்று நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால், உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.